Title of the document

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து எங்குமே விளம்பரப்படுத்தக்கூடாது என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், முதல் மூன்று இடம் பெறும் மாணவர்கள், பாடவாரியாக முதலிடம் பிடிக்கும்மாணவர்கள் என தேர்வு பெற்றோர் குறித்து ஊடகங்கள், பத்திரிகைகளில் தேர்வு முடிவு வெளிவந்தவுடன் பரபரப்பாக வெளிவரும்.இதைத் தனியார் பள்ளிகள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள்தான் முதலிடம், அதிக தேர்ச்சி என வியாபாரப்படுத்தியதும் அநேக இடங்களில் நடந்தது.

இதற்காக மாணவர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர், தேர்வு முறை மனப்பாட முறையாகிப் போனது.முதலிடம் பிடிப்பதற்காக எந்த லெவலுக்கும் செல்ல பள்ளிகள் தயாராக இருந்தன. மறுபுறம் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளிகளை நோக்கி லட்சக்கணக்கில் பணம் செலுத்தி தனது பிள்ளைகளை படிக்க வைக்க முயன்ற பெற்றோரின் போட்டியும் அதிகரித்தது.அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை ஒப்பிட்டுக் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அவமானப்படுத்தப்படும் நிகழ்வும்நடந்தது. இதனால் 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள்கூட மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வும் நடந்தது.மதிப்பெண் தனிப்பட்ட விவகாரம் அதை விளம்பரப்படுத்தக்கூடாது என்ற நல்ல முடிவை கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை எடுத்தது.இதனால் மாணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை குறைந்தது.

இந்த முடிவை பலரும் வரவேற்றார்கள்.ஆனாலும் தேர்வு முடிவுகள் சிடிக்களாக முதல்நாள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வருவதைப் பயன்படுத்தி முன்கூட்டியே பெற்று தங்கள் பள்ளிதான் அதிக அளவில் மாணவ்ர் தேர்ச்சி விகிதம், முதலிடம் பிடித்த மாணவர்,பள்ளி என்று முன்கூட்டியே விளம்பரப்படுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்தது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ஆண்டு முதல் தேர்வு நாளன்று காலை ஆன்லைனில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாக தேர்வு முடிவை அனுப்பும் உத்தரவை பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது.இந்நிலையில் நேற்று புதிய உத்தரவு ஒன்றையும் பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ளது.அதன் உத்தரவில் இனி பொதுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் குறித்து எங்குமே விளம்பரப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:''மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச்சூழலை தவிர்க்கும் வகையிலும், 2017-18 ம் ஆண்டில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்படுகிறது என்ற அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட அரசாணையின் நோக்கத்திற்கு மாறுபட்ட வகையில், ஒரு சில முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளை வெளியிடுதல், பதாகைகள் அமைத்தல், பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்கள் மாணவர்களின் நலன் கருதி தவிர்க்க வேண்டும்.இந்த முடிவை அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்படுத்தி அதன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். ’’இவ்வாறு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அதிரடி அறிவிப்பால் தேர்வில் மதிப்பெண் மூலமாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும், பள்ளிகள் இடையே நடக்கும் வியாபாரப் போட்டியும் குறையும் என்று நம்பப்படுகிறது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post