Title of the document

தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். 
அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன.

இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர்.அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சாரவாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக் காலியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.இவ்வாறு துறைத்தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை அனுப்பி குறிப்பிட்ட துறைகளின் ஒப்புதல் பெற்று காலியிடங்களை நிரப்புவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. துறைத்தலைவர் மூலம் அனுப்பப்படும் காலியிடங்களுக்கு அப்படியே ஒப்புதல் கிடைக்கும் என்று சொல்லவும் முடியாது. அரசின் நிதிநிலையை காரணம் காட்டிகாலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்.மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் செயலர் எஸ். ஸ்வர்ணாஅண்மையில் வெளியிட்ட அரசாணை: அரசு துறைகளில் காலியிடங்களை விரைவாக நிரப்பும் வகையில், காலியிடங்களை கணக்கிடுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்துவரும் முறையை மாற்றியமைக்க அரசு முடிவுசெய்துள்ளது.

துறைத்தலைவர்கள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்தில் காலியிடங்களுக்கு நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறாமல் அவர்களே முடிவு செய்துகொள்ளலாம்.அதேபோல், துறைத்தலைவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள சார்நிலை அதிகாரிகள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்திலும் இதே நடைமுறை பொருந்தும். டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாகநிரப்பப்படும் பணிகளில் உள்ள காலியிடங்களையும் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்களே முடிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

என்ஜிஓ சங்கம் வரவேற்பு

அரசு துறைகளில் காலியிடங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான புதிய நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்ஜிஓ) மாநில தலைவர் இரா.சண்முகராஜன் கூறும்போது, “புதிய முறையின்படி நேரம் பெருமளவு மிச்சமாகும். எனவே, நேரடி பணிநியமனங்கள் விரைவாக முடிக்கப்படும்.

இப்புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது” என்றார்.“தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post