தமிழகத்தில் அரசு தேர்வுத் துறை இயக்ககம் சார்பில் பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு 2017ம் ஆண்டு மார்ச் மாதம்
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டமானது கடலுார் மற்றும்
விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
கடலுார் மாவட்டத்தில் 202 அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக்
பள்ளிகளில் பயிலும் 31 ஆயிரத்து 525 மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வு
எழுத உள்ளனர். இது கடந்தாண்டைக் காட்டிலும் 1,626 மாணவ, மாணவியர்கள்
கூடுதலாகும்.
தேர்வு எழுத வசதியாக கடலுார் கல்வி மாவட்டத்தில் 54
மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களும் என, மொத்தம்
மாவட்டத்தில் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கடலுார் கல்வி மாவட்டத்தில்
252 பள்ளிகளில் பயிலும் 24 ஆயிரத்து 893 பேரும், விருத்தாசலம் கல்வி
மாவட்டத்தில் 158 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்து 377 பேரும் என மொத்தம்
மாவட்டத்தில் 37 ஆயிரத்து 270 பேர் எழுதுகின்றனர். இவர்களின் பெயர், பிறந்த
தேதி உள்ளிட்ட விவரங்கள் ஆன் லைனில் பதிவேற்றும் பணி நேற்று முடிந்தது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 2017ம்
ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. கடந்தாண்டு
தேர்ச்சியை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்
2 மாணவ, மாணவியருக்கு அரையாண்டு தேர்வு காலையில் முடிந்தவுடன் மதியம்
அடுத்த நாள் தேர்வுக்குரிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாத நாட்களில் பள்ளிக்கு
வரவழைத்து அடுத்த தேர்வுக்குரிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என
பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment